Monday, January 23, 2012

மீள் குடியேற்றம்

இது தான் எம் வீடு
கொஞ்சிக் குலாவி
நெஞ்சம் மகிழ்ந்திருந்த வீடு
இதில்தான் அப்பாவின் அலுவலக அறை
அதில் என்னது இருந்தது...
பக்கத்தில் அக்காவின்- இன்று
  எல்லாம் மண்ணோடு மண்ணாக
மொத்தக் குடும்பத்திற்கும்-இந்த
ஒற்றைக் கூடாரம்தான் தஞ்சம்...

நேற்றுப் பெய்த மழையின் ஈரம்
 இன்னும் காயவில்லை...
ஒரு வேளை உணவையாவது ஒழுங்காய் கொடுப்போம்
பருப் போடென்றாலும் - என்ற அங்கலாய்ப்புடன்
எரியவே மறுக்கும் அடுப்புடன்
போராடிக் கொண்டிருக்கும் அம்மா
இன்றும் மழைவருமா நேற்றுப் போல்
 எமையெல்லாம் தூங்க விடாது துரத்துமா...?
தாங்க முடியாத துயருடன் வானம் நோக்கும்
தங்கையின் வெறித்த பார்வை
கலையாத கனவுகளுடன் காத்திருந்து
 கணவனையும்...
 ஒற்றைக் காலையும் பறிகொடுத்து
தொலை தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்த களைப்பில்
அக்காவின் தொலைந்து போன நிஜமுகம்...

எப்படி வாழ்ந்த வீட்டில்
 இப்படி வாழ்கிறீர்களே" என்பதுபோல
கதிரையில்சித்திரமாய்...
பத்திரப்படுத்தப்பட்டிருக்கும்
அப்பாவினதும் தம்பியினதும் புகைப்படங்கள்
பரிதாபமாய் எமைப்பார்க்கும்
போரின் போது மடிந்தவர்கள் அவர்கள்
போரின் பின்னரும் நாங்கள்
 செத்துக் கொண்டிருக்கின்றோம்..
தினம் தினம்...
இதுதான் எங்களின் மீள் குடியேற்ற வாழ்வு

1 comment:

vetha (kovaikkavi) said...

வேதனை தான் தர்சி. இறைவன் தான் கண் திறக்க வேண்டும். நல்லது நடக்கும் என்று எதிர் பார்ப்போம். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..