Monday, January 23, 2012

என் உலகம்

என் கனவில் அடிக்கடி வரும் ஒரு உலகம்
அழகானது ரம்மியமானது..அங்கு யுத்தம் இல்லை சத்தம் இல்லை
கொலை இல்லை கொள்ளை இல்லை
கவலையில்லை கற்பழிப்புகளும் இல்லை...
மரணம் வரும் முதுமையில் மட்டும் தான்

பூக்களின் மகரந்தம் வீசும்
புட்களின் இன்னிசை கேட்கும்
 காற்று கவிபாடிச் செல்லும்
நாற்றுக்கள் எல்லாம் செழித்திருக்கும்
நன்மைகள் பலவும் விளைந்திருக்கும்

பஞ்சம் இல்லை பசியில்லை
பட்டினிதானும் சொட்டும் இல்லை
அவலம் இல்லை அநாதைகள்கூட அங்கு இல்லை
அழகிய உலகில் ஆண்டவனும் வருவான்

நான்பெரிது நீ பெரிது பேதம் அங்கில்லை
நல்லவரே எல்லோரும்
யாவரும் சமம் யாவரும் நலம்
மனித நேசிப்புகள் மட்டுமே இருக்கும்
அன்புதான் அங்கு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கும்

விடியும் கனவு கலையும்
கொலை கொள்ளை கற்பழிப்பு என
பத்திரிகைகளில் பக்கம் நிறையும்
மறுபடியும் இரவுக்காய் காத்திருப்பேன்
கனவில்தான் உலகின் விடியலை காணலாம் என்பதால்

1 comments:

kavithai (kovaikkavi) said...

''....கனவில்தான் உலகின் விடியலை காணலாம் என்பதால்...''
உண்மை தான் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ வேண்டும். எனது கவிதைகளில் கூட இதை நான் எழுதியுள்ளேன்...எல்லோரும் நல்லது நடக்கும் என்று எண்ணுவோம்.மன சக்தியே மகா சக்தி என்று நம்புவோம். வாழ்த்துகள் சகோதரி. இறை அருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..